இலங்கை
அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்தும் கனமழை இரண்டாவது நாளாகவும் கிட்டங்கி பாலம் ஊடான போக்குவரத்து பாதிப்பு!

அம்பாறை மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் அடை மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கல்முனை – சவளக்கடை ஊடான கிட்டங்கி பாலத்திற்கு மேலால் இரண்டாவது நாளாகவும் வெள்ளநீர் பெருக்கெடுத்துள்ளதால் பாலத்தின் ஊடாக போக்குவரத்து செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய முகாம், சவளக்கடை, கொளணி, அன்னமலை மற்றும் சொறிக்கல்முனை போன்ற பிரதேச பொதுமக்கள் போக்குவரத்து செய்வதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இதேவேளை நாவிதன்வெளி பிரதேச செயலகம், பிரதேச சபை, சுகாதார வைத்திய அலுவலகம் உட்பட அரச அலுவலகங்களில் பணியாற்றுவோர் மற்றும் பாடசாலைகளுக்குச் செல்லும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அரச அலுவலகங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்களும் குறித்த பாலம் ஊடாக பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பொலிசார் மற்றும்; பிரதேச செயலக அனர்த்த சேவைகள் உத்தியோகத்தர் குழு பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.