இலங்கை
ஆயிரம் ரூபாவை வழங்க மறுக்கும் பெருந்தோட்டக் கம்பனிகளை அரசாங்கம் மீள பொறுப்பேற்கும்- நிமல் சிறிபாலடி சில்வா

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மார்ச் மாதம் முதல் நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாய் கட்டாயம் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்க மறுக்கும் பெருந்தோட்டக் கம்பனிகளை அரசாங்கம் மீள பொறுப்பேற்கும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும் என சம்பள நிர்ணய சபை ஊடாக எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு தொழில் அமைச்சர் என்ற வகையில் நான் அனுமதி வழங்கியுள்ளேன். வர்த்தமானி ஒரிரு நாட்களில் வெளிவரும்.
கூட்டு ஒப்பந்தம் ஊடாக சம்பள பிரச்சினைக்கு தீர்வு காணவே முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் அடிப்படை சம்பளத்தை 700 ரூபாவில் இருந்து அதிகரிப்பதற்கு முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் தெரிவிக்கவில்லை.
இதனால் இழுத்தடிப்பு தொடர்ந்தது. இதனையடுத்தே இப்பிரச்சினையை சம்பள நிர்ணய சபைக்கு கொண்டுவரப்பட்டது.
ஒரு சில நிறுவனங்களே ஆயிரம் ரூபாவை வழங்க மறுக்கின்றன. அவ்வாறான நிறுவனங்களை அரசாங்கம் பொறுப்பேற்கும். இது தொடர்பில் கம்பனிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.