சர்வதேசம்
இன்று சர்வதேச வேட்டி தினம்

இன்று சர்வதேச வேட்டி தினம்
வேட்டி… இது ஆண்கள் அணியும் ஆடைகளின் பாரம்பரிய
அடையாளம். ஆனால், அந்த பாரம்பரியம் இப்போது அடையாளம்
தெரியாமல் போய்விட்டது. முன்பு தமிழகத்தில் மட்டுமல்லாது,
இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் வேட்டி கட்டும்
பழக்கம் இருந்தது.
வேட்டியை ஒடிசாவில் தோத்தி, குஜராத்தில் தோத்தியு, அசாமில்
சூரியா, மேற்கு வங்காளத்தில் தூட்டி, கர்நாடகாவில் கச்சே
பான்ச்சே, கேரளாவில் முந்த்து, ஆந்திராவில் பன்ச்சா,
மராட்டியத்தில் தோத்தர், பஞ்சாப்பில் லாச்சா, உத்தரபிரதேசம்
மற்றும் பீகாரில் மர்தானி என்று அழைக்கிறார்கள்.
கடல் தாண்டியும் வேட்டி அணியும் கலாசாரம் இலங்கை,
வங்காளதேசம், மாலத்தீவு போன்ற நாடுகளிலும் இருந்தது.
நாளடைவில், மேற்கத்திய உடை கலாசாரம்
மேலோங்கியதால், தமிழகத்தில் மட்டுமல்லாது எல்லா
இடங்களிலும் வேட்டிக்கு மவுசு குறைந்துபோய்விட்டது.
இந்த நிலையில், உலக பாரம்பரியத்தை பறைசாற்றும் ‘யுனெஸ்கோ’ நிறுவனம்,
கடந்த 2016-ம் ஆண்டு சர்வதேச வேட்டி தினம் ஆண்டுதோறும் ஜனவரி 6-ந்தேதி
(இன்று) கொண்டாடப்படும் என்று அறிவித்தது. அதன்பிறகுதான் இன்றைய
இளைஞர்களுக்கு வேட்டியின் மகத்துவம் தெரியத்தொடங்கியது. ஆனாலும்,
வேட்டியை முறையாக கட்டி பழக்கம் இல்லாததால், அதில் பெரும்பாலான
இளைஞர்கள் ஆர்வம் காட்டவில்லை. சொல்லப்போனால், அரசியல்வாதிகளின்
அடையாளமாக மட்டுமே வேட்டி இருந்து வருகிறது.
இதற்கிடையே, பல வேட்டி தயாரிக்கும் நிறுவனங்கள், இளைஞர்களை கவரும்
வகையில், வேட்டியை ஒட்டிக்கொள்ளும் வகையிலும், செல்போன் வைக்க
பைகளை வைத்தும், சட்டை நிறத்தில் வேட்டிக்கு ‘பார்டர்’ வைத்தும்
விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். என்றாலும், வேட்டிக்கு எதிர்பார்த்த அளவு
மவுசு கிடைக்கவில்லை.
தமிழனின் அடையாளம் இது என்பதை உணர்ந்து, தொடர்ந்து அணிவதில் ஆர்வம்
காட்ட வேண்டும். கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கையை கைதூக்கிவிட
வேண்டும் என்றால், ஆண்கள் வேட்டி அணிவதை பழக்கப்படுத்திக்கொள்ள
வேண்டும். பெண்களும் அதற்கு உந்து சக்தியாக இருக்க வேண்டும்.