இந்தியா
ராகுல் காந்தி மீது அவமதிப்பு வழக்கு

ஆர்எஸ்எஸ் அமைப்பை அவதூறாகப் பேசியதாகக் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கில் மும்பை பிவாண்டி நீதிமன்றத்தில் வரும் மே 15-ம்தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த ராஜேஷ் குந்தே என்பவர் ராகுல் காந்தி மீது அவமதிப்பு வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு தானேயில் உள்ள பிவாண்டியில் ஒரு பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், ” மகாத்மா காந்தியை கொலை செய்ததற்குப் பின்புலத்தில் ஆர்எஎஸ்எஸ் அமைப்புதான் இருந்தது” எனக் குற்றம்சாட்டினார்.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறிய ராகுல் காந்திக்கு எதிராக பிவாண்டி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் நிர்வாகி ராஜேஷ் அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கில் கடந்த 2018-ம் ஆண்டு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நேரில் ஆஜராகினார். அப்போது ராகுல் காந்தி தரப்பில் கூறுகையில் ” ராகுல் காந்தி எந்தத் தவறும் செய்யவில்லை. இந்தக் குற்றச்சாட்டு புனையப்பட்டுள்ளது விசாரணைக்கு உகந்தது அல்ல” எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு மாஜிஸ்திரேட் ஜே.வி. பாலிவால் முன்னிலையில் கடந்த சனிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ராகுல் காந்தியின் வழக்கறிஞர் நாராயன் அய்யர் வாதிடுகையில், கரோனா வைரஸ் பரவல் இருப்பதால், ராகுல்காந்தி நீதிமன்றத்தில் நேரில்ஆஜராவதில் விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரினார். இதற்கு நீதிபதி சம்மதம் தெரிவித்தார்.
ராஜேஷ் குந்தேயின் வழக்கறிஞர் பி.பி.ஜெய்வ்த் வாதிடுகையில், ” சில ஆதாரங்களைத் தாக்கல் செய்ய வேண்டியிருப்பதால், இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும்” எனக் கோரினார்.
இதையடுத்து, வழக்கின் விசாரணையை வரும் மே 15-ம் தேதிக்கு நீதிபதி பாலிவால் ஒத்திவைத்து உத்தரவிட்டார். அன்றைய தினம் மனுதாரரின் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.